ஊழல் புகார்களை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்று முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டனர்.
மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்பட்டது.
இந்த அமைப்பின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து அண்மையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதனடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நியமன உத்தரவுகளை பிறப்பித்தார். இந்நிலையில், லோக் ஆயுக்தா அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து அதன் உறுப்பினர்களாக ராமராஜ் மற்றும் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோர் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். வரும் 2027-ம் ஆண்டு வரை ராஜமாணிக்கம் லோக் ஆயுக்தாவின் தலைவர் பதவியில் நீடிப்பார் எனவும், உறுப்பினர்கள் இருவரும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் தொடர்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.