பொதுமக்கள் உயிர் குறித்துச் சிறிதும் அக்கறையின்றி, தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பின்றிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட, சிறுபாடு கிராமத்தைச் சேர்ந்த ஷாகிரா என்ற பெண், மருத்துவர்கள் இல்லாத நிலையில், முறையான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
அரசு ஆரம்ப சுகாதார மையங்களில், 1,467 மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து, கடந்த 07.01.2025 அன்று கேள்வி எழுப்பியிருந்தோம். இதனை அடுத்து, தமிழகத்தில் 2,642 மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதால், பணி ஆணை வழங்கப்பட்ட மருத்துவர்களை எங்கு நியமனம் செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.
பொதுமக்கள் உயிர் குறித்துச் சிறிதும் அக்கறையின்றி, தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பின்றிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
உண்மையில் மருத்துவர்கள் பணி நியமனம் நடைபெற்றதா அல்லது வழக்கம்போல கண்துடைப்பு அறிவிப்புகள் வெளியிட்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறதா திமுக அரசு? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.