சீன ஆய்வகத்தில் இருந்து தான் கோவிட் வைரஸ் பரவியதாக, 2020ம் ஆண்டிலேயே ஜெர்மன் உளவுத்துறை ஆதாரங்களை கண்டுபிடித்த நிலையில், அப்போதைய அரசு அதை மூடி மறைத்ததாக புதிய அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகையே முடக்கி போட்ட கொரோனா வைரஸ், சீனக் குகைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டைவிரல் அளவிலான வௌவால் ஒன்றிலிருந்து வந்தது என்று சர்வதேச விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகிறார்கள்.
உலக நாடுகள் அனைத்தையும் அழிவுப் பாதைக்குத் தள்ளிய இந்த கொரோனா வைரஸ், எப்படி, எப்போது வௌவாலை விட்டு வெளியேறியது என்பது இன்னும் விடை தெரியாத கேள்விகளாகவே உள்ளன.
முதன்முதலில் 2019ம் ஆண்டின் பிற்பகுதியில், சீனாவின் வூகானில் கொரோனா வைரஸ் தோன்றியது. பின்னர் உலகளவில் பரவியது. 2020 ஆம் ஆண்டு மார்ச் 11ம் தேதி கோவிட்-19 ஐ ஒரு தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
SARS-CoV-2 என்ற கொரோனா வைரஸால் வந்த COVID-19 நோயால், இதுவரை 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மேலும் 75 கோடியே 72 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவின் வூகான் மாகாணத்தில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் விடுவிக்கப்பட்டதாக, ஜெர்மனியின் உளவுத்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி, இரண்டு ஜெர்மனி செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் வூகானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் உருவானது என்ற முடிவுக்கு 2020ம் ஆண்டே ஜெர்மனி உளவுத்துறை வந்தன என்று Zeit மற்றும் Suddeutsche Zeitung ஆகிய செய்தி நிறுவனங்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மேற்குலக நாடுகளுடன் இந்த கண்டுபிடிப்புக்கள் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
2020ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், கோவிட்-19 நோய், உலகில் பரவி வந்த நிலையில், இந்த நோயை உண்டாக்கும் கொரோனா வைரஸ் எங்கே தோன்றியது என்பதைக் கண்டறிய, ஜெர்மனி உளவுத் துறை Project Saaremaa என்ற நடவடிக்கையைத் தொடங்கியது.
வெளிநாட்டு அரசுகள் மற்றும் அறிவியல் நிறுவனங்களிடமிருந்து முக்கியமான தகவல்களை ரகசியமாக சேகரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற உளவுத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப் பட்டனர்.
அந்த உளவுத் துறை அதிகாரிகள், வெளியிடப்படாத தரவுகள், சீன ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து உள் ஆவணங்கள் மற்றும் 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கான ஆய்வுக் கட்டுரைகளை பெற்றதாக கூறப்படுகிறது.
புதிய வைரஸ் பாதிப்பு மற்றும் விளைவுகள் பற்றி ஆரம்ப கட்டத்திலேயே சீன அரசுக்கு அதிக அளவு புரிதல் இருந்தது என்பதே ஜெர்மனியின் உளவுத்துறைக்கு கிடைத்த முக்கிய தரவாகும்.
இது மட்டுமில்லாமல், கோவிட்-19 வைரஸ் சீனாவில் தான் தோன்றியது என்பதற்கான 95 சதவீத தரவுகளை ஜெர்மனி உளவுத்துறை கண்டறிந்துள்ளது.
அப்போதைய ஜெர்மனி அதிபராக இருந்த ஏஞ்சலா மெர்க்கலின் அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட உளவுத்துறை, குழுவின் அறிக்கையை வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பதவி விலகும் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸும் இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.
ஜெர்மனி உளவுத்துறை அறிக்கை அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையிலேயே, சீன அரசுக்கு சொந்தமான ஆய்வகத்தில் இருந்தே கொரோனா வைரஸ் தோன்றியிருக்கிறது என்று அமெரிக்கா புலனாய்வு அமைப்பான FBI உறுதியாக தெரிவித்திருந்தது.
சீனாவின் வூகான் மாகாணத்தில் உள்ள ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது என்ற குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்துவருகிறது.
ஒரு ஆய்வக கசிவு,பெரும் தொற்று நோயை உருவாக்கி,உலகையே உலுக்கி உள்ளது என்பதே உண்மை.
சீனா, அடுப்பு நெருப்பை சமையலறை நெருப்பாகவும், சமையலறை நெருப்பை நகர நெருப்பாகவும், நகர நெருப்பை கடைசியில் உலகளாவிய நெருப்பாகவும் மாற்றியிருக்கிறது.