திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே, வகுப்பறையில் செல்போனில் வீடியோ எடுத்ததை பேராசிரியை கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமயபுரம் சுங்கச்சாவடி அருகே செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் திருவாரூரைச் சேர்ந்த தரணிதரன் என்பவர் தங்கி பயின்று வருகிறார். வகுப்பறையில் முன்வரிசையில் அமர்ந்திருந்த மாணவரை பேராசிரியை கண்டித்தபோது அதனை தரணிதரன் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதனைக் கண்ட பேராசிரியை மாணவரை கடுமையான வார்த்தைகளால் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்குள்ளான தரணிதரன் கல்லூரியின் 4ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில் படுகாயமடைந்த அவர், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாணவனின் தாய் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.