சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து 9 மாதங்களுக்கு பின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்தடைந்தார்.
விண்வெளியில் 9 மாதங்களை கழித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்து வர, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் குழு சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றது.
அந்த டிராகன் விண்கலத்தில் அமெரிக்காவின் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரரான அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் பூமிக்கு திரும்பினர். இந்நிலையில், இன்று அதிகாலை இந்திய நேரப்படி 3.27 மணியளவில் டிராகன் விண்கலம் அமெரிக்காவில் உள்ள புளோரிடா கடற்பரப்பில் பத்திரமாக தரையிறங்கியது.
தொடர்ந்து மீட்பு படகுகள் உதவியுடன் விண்கலம் மீட்கப்பட்டு, அருகில் இருந்த கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், விண்கலத்திலிருந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களும் அமர்ந்தபடியே பாதுகாப்பாக வெளியே அழைத்து வரப்பட்டனர். அப்போது அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்து அவர்களை வரவேற்ற நிலையில், சுனிதா உள்ளிட்டோர் தங்கள் கைகளை அசைத்து அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.
பூமிக்கு திரும்பிய 4 விண்வெளி வீரர்களும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவர்களுக்கு அடுத்தகட்டமாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் நாசா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.