தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தியதற்கு ஆயிரத்து 521 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரப்பதிவுத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டையில் பெல் நிறுவன ஆலை அமைப்பதற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி, கடந்த 2017-ம் ஆண்டு இரு தனி நபர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 2024-ம் ஆண்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இழப்பீட்டிற்காக நிலம் வழங்கியவர்களை பிச்சை பாத்திரத்துடன் நிற்க வைத்துவிட்டதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.
மேலும், இழப்பீடு உத்தரவுகளை அமல்படுத்தக்கோரி நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை சமர்பிக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தியதற்கு ஆயிரத்து 521 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியுள்ளதாகவும்,
இது தொடர்பான உத்தரவுகளை அமல்படுத்தக்கோரி ஆயிரத்து 222 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் பத்திரப்பதிவுத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அறிக்கையில் உள்ள விவரங்களை கண்டறிந்த நீதிபதி பெருந்தொகை இழப்பீடாக வழங்க வேண்டியுள்ளதால் இதற்கு தீர்வு காண அரசு தலைமை வழக்கறிஞர் உதவ வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை மார்ச் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.