சபரிமலையில் இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான புதிய நேர கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.
திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாத பூஜை நாட்களில் இருமுடி கட்டுடன் வரும் பக்தர்கள் கூடுதல் நேரம் சாமி தரிசனம் செய்ய வசதியாக, இருமுடி கட்டு இல்லாமல் வரும் பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, மாத பூஜை நாட்களில் இருமுடி கட்டு இல்லாமல் வரும் பக்தர்கள் காலை 6 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. அதேபோல, இரவு 9.30 மணி வரை அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ள நிலையில், சன்னிதானத்தில் கூடுதல் வசதிகளுடன் சாமி தரிசனம் செய்வதற்கான திட்ட பணிகள் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்டம் குறைவான நாட்களில் கொடி மரத்தை சுற்றி பக்தர்கள் நேராக சாமி தரிசனம் செய்யவும், கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் மேம்பாலத்தில் ஏறி சென்று சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் கூறியுள்ளது.