மதுரையில் பாஜக நிர்வாகி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி உறவினர்கள் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் பாஜக ஓ.பி.சி அணியின் செல்லூர் மண்டல செயலாளராகப் பதவி வகித்து வந்தார்.
கடந்த திங்கள் கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியேறிய கருப்பசாமி வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடி வந்தனர். தொடர்ந்து கூடல் புதூர் பகுதியில் கருப்பசாமி காரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
மூக்கில் நுரை தள்ளிய நிலையில் கருப்பசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதால் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி குடும்பத்தினர் மற்றும் பாஜகவினர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். மேலும் உரிய விசாரணை நடத்தும் வரை உடலைப் பெற மாட்டோம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.