கேரள மருத்துவக்கழிவுகளை தமிழகத்தில் கொட்டாதீர்கள் என சென்னை வந்துள்ள கேரள முதல்வரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்திற்கு வருகை தந்துள்ள கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முடிவை கைவிடுங்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களை சகோதரத்துவ உணர்வோடு கேரள மாநிலத்திற்கு வழங்கி வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அதுபோல் கேரளாவில் ஆண்டுதோறும் கடலில் வீணாகக் கலக்கும் 2000 டிஎம்சி தண்ணீரில் ஒரு 200 டிஎம்சி தண்ணீரை நீங்கள் சகோதரத்துவ உணர்வோடு தமிழகத்திற்கு வழங்க முன் வாருங்கள் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் நலன் மீது உண்மையிலேயே தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு
அக்கறை இருக்குமானால் மேலே நாம் குறிப்பிட்டுள்ள விஷயங்களை , கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்களிடம் நிச்சயம் அவர் வலியுறுத்துவார் என்றும், அதுகுறித்துப் பேசி இரு மாநிலங்களுக்கும் இடையே இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இரு மாநில உறவுகளை மேம்படுத்த முயற்சி எடுப்பார் என எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தின் நலன் மீது தமிழக முதல்வருக்கு எந்த அளவிற்கு அக்கறை இருக்கிறது என்பதை நாம் பொருத்திருந்து பார்க்கலாம் என்றும் ஹெச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.