AI தொழில்நுட்பத்தின் வருகை, பல software engineerகளின் வேலையை காலி செய்துவிடும் என்று OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார். இதனையே வேறுவிதமாக, 90 சதவீத மென்பொருள் குறியீட்டு முறைகளை இனி AI எழுதும் என்று Zoho நிறுவனத் தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்புவும் தெரிவித்துள்ளார். software engineer-களின் வேலைக்கு AI வேட்டு வைக்குமா ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, அவை மனிதர்களின் வேலையைப் பறித்துக் கொள்ளுமா என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.
சிலர் செயற்கை நுண்ணறிவால், மனிதர்களின் வேலைவாய்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், வேறு சிலர் AI, மனிதர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துக் கொள்ளும் என்றும் கூறி வருகின்றனர்.
ஏற்கெனவே, AI தொழில்நுட்பத்தால், software engineer களின் வேலைவாய்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கூறியிருந்தார். செயற்கை நுண்ணறிவைச் சரியாகக் கையாளும் போது, இந்த தொழில்நுட்பம் மனிதர்களின் பணியை மேலும் வேகமாகச் செய்துமுடிக்க உதவியாகவே இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். அதனால், வரும் ஆண்டுகளிலும், IT துறையில், software engineer தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கும் என்று நம்பப் பட்டது.
இந்நிலையில், Ben Thompson உடனான நேர்காணலில், OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான sam altman, செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சியால், இனி software engineer-களுக்கான தேவை வெகுவாக குறைந்து விடும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், பல IT நிறுவனங்களில் 50 சதவீத மென்பொருள் குறியீட்டை AI தான் எழுதுகிறது என்று உறுதிப்படுத்தி இருந்தார்.
Anthropic நிறுவனத்தின் CEO ((Dario Amodei)) டாரியோ அமோடியும், இன்னும் 12 மாதங்களுக்குள் அனைத்து மென்பொருள் குறியீடுகளையும் AI எழுதும் என்று கணித்திருந்தார். மெட்டாவின் மார்க் ஜுக்கர்பெர்க்க்கும் கடந்த ஜனவரி மாதம் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார். கடந்த ஆண்டு, Nvidia CEO ஜென்சன் ஹுவாங், எதிர்காலத்தில், குறியீட்டு முறையைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அந்தப் பணியை AI செய்யும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த விவாதத்தில் ,இப்போது ZOHO ஸ்ரீதர் வேம்புவும், AI 90 சதவீத குறியீட்டை எழுதும் என்பதை ஒப்புக்கொள்வதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும், software engineer எழுதும் குறியீட்டில் 90 சதவீதம் (‘boiler plate’) “பாய்லர் பிளேட்” வகையில் உள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு புரிதலுக்காகச் சொல்லவேண்டும் என்றால், பாய்லர்பிளேட் என்பது அடிப்படை உள்ளடக்கங்கள் மற்றும் அடிப்படை SERVER பக்கத்துக்கு பொருத்தமான கிக்-ஸ்டார்ட் டெம்ப்ளேட் ஆகும். அதாவது, கட்டுமானத் தொகுதிகள் இல்லாத வீட்டின் வரைபடத்தைப் போன்றதாகும்.
மனிதர்கள் ஏற்கனவே கண்டுபிடித்த வடிவங்களை அங்கீகரித்து செயலாக்குவதில் AI சிறந்து விளங்குகிறது. இருப்பினும், முற்றிலும் புதிய வடிவங்களை உருவாக்கும் திறன் AI க்கு உள்ளதா? என ஸ்ரீதர் வேம்பு கேள்வி எழுப்பியுள்ளார். ZOHO ஸ்ரீதர் வேம்புவின் பதிவுக்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில், 2025 ஆம் ஆண்டில், மென்பொருள் தீர்வுகளை வடிவமைத்தல், கட்டமைத்தல் மற்றும் செயல்படுத்துவதில் AI பயன்படுத்தப்படும் என்று கணிக்கப் பட்டுள்ளது. மேலும், மென்பொருள் பொறியியலில் AIக்கான சர்வதேச சந்தை இந்த ஆண்டுக்குள்,57.2 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 33.4 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
AI குறியீட்டு உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என்று 75 சதவீத டெவலப்பர்கள் நம்புவதாக GitHub நடத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது. கூடுதலாக, IDC நடத்திய ஒரு ஆய்வில், இந்த ஆண்டில், குறிப்பிடத்தக்க 90 சதவீத நிறுவனங்கள் AI-மேம்படுத்தப்பட்ட மென்பொருள் மேம்பாட்டில் முதலீடு செய்ய விரும்புவதாகக் கணித்துள்ளது. அதே சமயம் ,85 சதவீத வணிகங்கள் AI-சார்ந்த மென்பொருள் மேம்பாட்டை ஏற்றுக்கொள்ளும் என்று IDC அறிக்கை தெரிவிக்கிறது.
ஒட்டு மொத்தத்தில், IT துறையில் AI தாக்கம், software engineer-களுக்கான பாதிப்பா? வேலை பளுவை குறைக்கும் ஊக்கமா? எனப் போக போக தெரியும் என்கிறார்கள் மென்பொருள் துறை வல்லுநர்கள்.