மதுரையில் காவலர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சனேரி பகுதியில் கடந்த 19-ம் தேதி பாதி எரிந்த நிலையில், விருதுநகரைச் சேர்ந்த காவலர் மலையரசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அவனியாபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மூவேந்தர் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காவலர் மலையரசன் வங்கி கணக்கில் அதிகளவில் பணம் இருப்பதை அறிந்து, நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்து எரித்ததாக மூவேந்தர் வாக்குமூலம் அளித்தார்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றபோது, காவலரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற அவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
இதில் காலில் காயமடைந்த மூவேந்தர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய வில்லாபுரம் ஹவுசிங்போர்டு சேர்ந்த சிவா என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.