தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக உருவாக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியர்களாக 2002ஆம் ஆண்டு தொகுப்பூதியம் அடிப்படையில் ஆயிரத்து 800 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக உருவாக்கக் கோரி 723 சிறப்பு ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில், தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் சிறப்புக் குழந்தைகள் உள்ளனர் என்றும், 10 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர்கள் என்ற விகிதத்தின் அடிப்படையில் தமிழகத்தில் 13 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட சிறப்பு ஆசிரியர்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படுவதில்லை என்றும், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு ஏப்ரல் 21ஆம் தேதி மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.