தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் நடப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை, ஏப்ரல் 21-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றம் இறுதிக்கெடு விதித்துள்ளது.
சென்னை ராயபுரத்தில் உள்ள நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக நடப்பட்டுள்ள கொடிக் கம்பத்தை அகற்ற உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ராகேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் நடப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், வரும் ஏப்ரல் 21-ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் நடப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என இறுதி கெடு விதித்தது.
மேலும், இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் எனவும் குறிப்பிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.