சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்க கோரி நடிகர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தது. அதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து 3 கோடியே 74 லட்சம் ரூபாய் கடன் பெறப்பட்டது.
அந்த கடனை திருப்பி செலுத்தாததால் ஜகஜால கில்லாடி படத்தின் உரிமையை தனபாக்கியம் நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மத்தியஸ்தர் உத்தரவிட்டார்.
ஆனால், அதனை செயல்படுத்தாத நிலையில், துஷ்யந்தின் தாத்தாவான நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஏலம் விடுவதற்காக ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அந்த உத்தரவை ரத்து செய்ய கோரி சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சிவாஜி கணேசன் உயிருடன் இருந்தபோதே வீட்டை தனக்கு உயில் எழுதி வைத்ததாகவும், தனது சகோதரர் ராம்குமாரின் குடும்பத்திற்கு வீட்டில் எந்த உரிமையும் இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.