கோவையில் பாஜக கொடியை தீ வைத்து எரித்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கணபதி அருகேயுள்ள வ.உ.சி நகர் பேருந்து நிறுத்தத்தில் பாஜக கொடிக் கம்பம் அமைந்துள்ளது. இன்று அப்பகுதிக்கு வந்த மர்ம நபர் ஒருவர், கொடிக் கம்பத்தில் இருந்த கொடியைக் கீழே இறக்கி, அதனை அறுத்தெடுத்து தீ வைத்து எரித்துள்ளார்.
இதனைக் கண்ட பாஜக-வினர் சிலர், உடனடியாக ஓடிச்சென்று, கொடியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். தொடர்ந்து மர்ம நபரிடம் அவர்கள் கொடிக்கு தீ வைத்ததற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர்களுக்கும் மர்ம நபருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசாரிடம், மர்ம நபரை பாஜக-வினர் ஒப்படைத்தனர்.
பின்னர் அந்த நபரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், அவர் யார்? பாஜக கொடிக்கு தீ வைக்கக் காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.