திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும், அரசாணை 354 ஐ நடைமுறைப்படுத்தவில்லை என்பது ஏமாற்று வேலை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, எப்போதுமே, தனியாருக்கு ஆதரவாகவும், அரசுக் கட்டமைப்புகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கக் கூடாது என்பதற்காக, தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, திமுகவினர் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு வருமானம் கிடைக்க நீட் எதிர்ப்பு என சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்த வகையில், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வுக் கோரிக்கையை, ஆட்சிக்கு வந்த ஐந்தாவது ஆண்டாகக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் திரு. ஸ்டாலின் அவர்களைச் சேரும்.
தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் நம்பியிருப்பது அரசு மருத்துவமனைகளைத்தான். சாமானிய மக்களுக்காக, சலிப்பின்றி பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்கவும், அரசு மருத்துவர்கள் நலன் மற்றும் சுகாதாரத் துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், இன்றைய முதலமைச்சரின் தந்தையும், மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி அவர்கள், கடந்த 2009 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணை 354, இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆட்சிக்கு வரும் முன்பு, அரசு மருத்துவர்கள் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு குரல் கொடுத்த திரு. ஸ்டாலின் அவர்கள், தான் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும், அரசாணை 354 ஐ நடைமுறைப்படுத்தவில்லை என்பது ஏமாற்று வேலை.
தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியம், சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் தங்கியும், நாட்டிலேயே மிகக் குறைவாகவும் இருப்பதாக, அரசு மருத்துவர்கள் வேதனைப்படுகிறார்கள். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகத்தில் போதிய அளவுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இல்லாமல், பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
போதிய மருத்துவர்கள் இல்லாமல், மருத்துவர்களின் பணிச்சுமையும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில், மருத்துவர்களுக்கு உரிய ஊதியமும் வழங்காமல் புறக்கணித்து விட்டு, இத்தனை ஆண்டுகால தமிழக சுகாதாரத் துறை கட்டமைப்பையே பழுதாக்கிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
கொரோனா பேரிடர் காலகட்டத்தில், நமது நாடும், தமிழகமும் விரைவாக மீண்டெழுந்ததற்கு, நமது மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையும் முக்கியக் காரணம். நமது மருத்துவர்களின் சேவையை, திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே அங்கீகரித்திருக்க வேண்டும். ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்தும் அங்கீகரிக்காமல், போராடும் நிலைக்கு அரசு மருத்துவர்களைத் தள்ளியிருக்கிறது திமுக அரசு.
அரசு மருத்துவர்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற டாக்டர் லட்சுமி நரசிம்மன் அவர்கள் உயிரிழந்து, 5 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், அவர் முன்னெடுத்த கோரிக்கை இன்னமும் நிறைவேறவில்லை. மேலும், கொரோனா பேரிடர் காலத்தில், தன்னலமின்றி பணியாற்றி, அதனால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் அவர்களின் மனைவி திருமதி. திவ்யா விவேகானந்தன் அவர்களுக்கு, அரசு வேலை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
அரசு வேலை வழங்கக்கோரி, திருமதி. திவ்யா விவேகானந்தன் அவர்கள், முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தும், தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. பொதுமக்களுக்காக உயிர் நீத்த ஒரு மருத்துவரின் குடும்பம், அரசு ஆதரவின்றி விடப்படுவது எத்தனை பெரிய வரலாற்றுப் பிழை.
சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசாணை 354 ஐ நடைமுறைப்படுத்தக் காத்திருக்கும் அரசு மருத்துவர்களை இனியும் ஏமாற்றுவது சரியல்ல. ஊருக்கெல்லாம் தன் தந்தை பெயரை வைத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தனது தந்தை பிறப்பித்த அரசாணை 354 ஐ உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், கொரோனா பேரிடர் பணியில் உயிர்நீத்த அரசு மருத்துவர் திரு. விவேகானந்தன் அவர்கள் மனைவி திருமதி. திவ்யா விவேகானந்தன் அவர்களுக்கு உடனடியாக, அரசுப் பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என்றும், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் காலியிடங்கள் அனைத்தும் முழுமையாக நிரப்பப்பட வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பில் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.