சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகச் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில், கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக் குமார், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் பி.சண்முகம் உள்ளிட்ட 13 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இதனை அடுத்துச் சம்பந்தப்பட்ட 13 பேரும் நேரில் ஆஜராகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் உள்ளிட்ட 13 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில், அசோக் குமார் உள்ளிட்ட 13 பேருக்குக் குற்றப்பத்திரிகை நகலை பென் டிரைவ் மூலம் வழங்க அனுமதி கோரப்பட்டது. இதற்கு அசோக் குமார் உள்ளிட்டோர் தரப்பில் மின்னனு ஆவணமாக இல்லாமல் காகித வடிவில் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, புதிய சட்டத்தின் அடிப்படையில் மின்னனு முறையில் ஆவணங்கள் வழங்கலாம் எனத் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குக் குற்றப்பத்திரிகை நகலை வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஏப்ரல் 25-ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.