கோவையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வந்த மத போதகரான ஜான் ஜெபராஜ், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று மத போதனையில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஆண்டு மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, தலைமறைவான ஜான் ஜெபராஜ பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
நெல்லை, தென்காசி உள்ளிட்ட இடங்களில் தனிப்படை போலீசார் அவரைத் தேடி வந்த நிலையில், முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜான் ஜெபராஜ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், மூணாறில் பதுங்கியிருந்த மத போதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கைது செய்து, கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.