தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தலை ஏற்று பாஜக தொண்டர்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற உறுதியோடு, கடந்த சுமார் நான்கு மாதங்களாக, நான் உட்பட தமிழக பாஜக சகோதர சகோதரிகள் பலரும், காலணி அணியாமல் விரதத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம், பாஜக மாநிலத் தலைவர், நயினார் நாகேந்திரன் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, தமிழகத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலில்,தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக ஆட்சியை நிச்சயம் அகற்றும் என்ற உறுதியுடன், காலணி அணியத் தொடங்கியிருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
என்னுடன் விரதம் மேற்கொண்டு வந்த தமிழக பாஜக சகோதர சகோதரிகள், வரும் நாட்களில், தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கல்லையும் முள்ளையும் கடந்து பயணப்பட்டு, தங்கள் கடின உழைப்பை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆகவே, அண்ணன் நயினார் நாகேந்திரன் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, அனைவரும் தங்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று, உங்கள் அன்பு சகோதரனாகக் கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.