தமிழர்களின் மத-கலாச்சார நம்பிக்கைகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் திமுக-விற்கு வாக்குச்சாவடிகளில் சவுக்கடி கிடைக்கப் போவது நிச்சயம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மொழியின் காவலன் நான் என வீராப்பு காட்டும் அய்யா ஸ்டாலின் நண்பகல் கடந்தும் நமது தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறாமல் அவர்களைப் புறக்கணித்து வருகிறார் என அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த ஆண்டும் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனத்தின் “ஆவின்” பால் பாக்கெட்டுகளில் புத்தாண்டு வாழ்த்துகள் பதிவிடப்படவில்லை என்றும் ஆங்கிலப் புத்தாண்டிற்கு அகிலத்திற்கெல்லாம் வாழ்த்துமடல் எழுதும் முதல்வருக்கு, ஆண்டாண்டு காலமாகத் தமிழர்களின் கலாச்சாரக் கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
”தமிழுக்காக உயிரைக் கொடுக்கும் கழகம் திமுக” என விளம்பர வசனம் பேசிக் கொண்டு நமது தாய்த் தமிழை வெறும் அரசியல் பிழைப்பு மொழியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? என கேள்வி எழுப்பியவர், தொடர்ந்து தமிழர்களின் மத-கலாச்சார நம்பிக்கைகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் திமுக-விற்கு வாக்குச்சாவடிகளில் சவுக்கடி கிடைக்கப் போவது நிச்சயம் என்று நயினார் நாகேந்திரன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
ஜனவரி 1 அன்று உற்சாகமாக வாழ்த்துகளை பகிரும் முதல்வர் ஸ்டாலின் சித்திரை 1 அன்று மௌன விரதம் இருப்பது தமிழர்களை அவமதிக்கும் கீழ்த்தரமான செயல் என்றும் தமிழர் வாழ்வியல் பண்டிகையை புறக்கணிக்கும் முதல்வரை, தமிழகம் புறக்கணிக்கும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.