டாஸ்மாக் முறைகேடு மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, எந்த நம்பிக்கையின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளது என்பதை அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும் என டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிப்பது தானே அரசின் நோக்கம் என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து ஆஜரான அமலாக்கத்துறை தரப்பு, மாநில காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்ததாக வாதிட்டது.
டாஸ்மாக் முறைகேடு மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்தது சோதனை மூலம் தெரியவந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
தொடர்ந்து அமலாக்கத்துறையின் வாதம் நிறைவடையாததை அடுத்து வழக்கின் விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.