சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி, முதல் படத்திலேயே பெயரையும் புகழையும் பெற்றார். பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கைதி, பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் கார்த்தி.
தற்போது இவர் வா வாத்தியார் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் பி.ஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.
இது தவிர மாரி செல்வராஜ், சுந்தர். சி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார் கார்த்தி.
இந்நிலையில் கார்த்தி முதன்முறையாக மாலை அணிந்து சபரிமலையில் தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கார்த்தி, நடிகர் ஜெயம் ரவி இணைந்து சபரிமலைக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.