சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகிக்கும் திட்டத்திற்கு
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாகச் சென்னையில் உள்ள வீடுகளுக்குக் குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து 48 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த டோரண்ட் கேஸ் நிறுவனத்திற்குத் தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
நீலாங்கரை, அடையாறு, திருவான்மியூர், சேப்பாக்கம், ராயபுரம், பாரிமுனை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் TORRENT GAS நிறுவனம் சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 466 கிலோ மீட்டர் நீளத்திற்குக் குழாய் அமைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.