மதுரை அலங்காநல்லூரில் உள்ள ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் போலீசாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரை பகுதியில் உள்ள ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஆயிரம் காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், பணம் பெற்றுக் கொண்டு செல்வாக்கு மிக்கவர்களின் காளைகள் களமிறக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் டோக்கன் வழங்குவதிலும் முறைகேடு நடைபெறுவதாக வீரர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, மாடுபிடி வீரர்களுக்கு பற்றாக்குறை நிலவியதால் சுமார் அரை மணி நேரம் போட்டி நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஆதார் அட்டை இருந்தால் மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனால் ஆதார் அட்டையுடன் ஏராளமான இளைஞர்கள் அங்கு குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார், லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.