சிந்து நதி நீரை இந்தியாவிற்குள் மடைமாற்றம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் என்னென்ன? என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோருடனான ஆலோசனையில், இதுபற்றி அமித் ஷா உரையாடியுள்ளார். இதற்கிடையே, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் சிந்து நதிநீரை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை இந்திய ஜல் சக்தி துறை செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி, பாகிஸ்தான் நீர்வளத்துறைக்கு அனுப்பியுள்ளார். பாகிஸ்தானின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்பாடுகள் இந்த ஒப்பந்தத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.