திருப்பூரில் செவிலியராக பணிபுரியும் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பூம்புகார் நகரில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் பெண்ணின் உடலைக் கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்த பெண் தனியார் பல் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த சித்ரா என்பதும், அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், மனைவி சித்ராவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, கணவர் ராஜேஷ் கண்ணா அவரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றதும் போலீசாருக்கு தெரியவந்தது.
தொடர் விசாரணையில் மதுரை அலங்காநல்லூரில் ராஜேஷ் கண்ணா தனது இரு குழந்தைகளுடன் பதுங்கியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதனடிப்படையில் அங்குச் சென்ற போலீசார் ராஜேஷ் கண்ணாவைக் கைது செய்து திருப்பூருக்கு அழைத்துச் சென்றனர்.