டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் திருப்பதி ஏழுமலையானை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய பாடலை நீக்காவிட்டால், 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தேவஸ்தான அறங்காவலர் குழு சார்பில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் சந்தானத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சந்தானம் நடிப்பில் உருவான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வரும் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் இந்துக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் விதமாக, திருப்பதி ஏழுமலையானை இழிவுபடுத்தும் சர்ச்சை பாடல் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் சந்தானம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஜனசேனா கட்சியின் திருப்பதி மண்டல தலைவர் கிரண் ராயல் நேற்று திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், தேவஸ்தான அறங்காவலர் குழுவும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சை பாடலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் சந்தானம் ஆகியோருக்கு, அறங்காவலர் குழு உறுப்பினர்களில் ஒருவரான பானு பிரகாஷ் ரெட்டி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் சர்ச்சைக்குரிய பாடலை உடனடியாக படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும், நீக்க தவறினால் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு 100 கோடி ரூபாய் நஷ்டயீடு கேட்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.