முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்க, பிரதமர் தலைமையிலான மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட, பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய அளவில் அதிக வாய்ப்புகளைப் பெற்று தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், 12 மாத தொழிற்பயிற்சியுடன், மாதம் ₹5,000 உதவித்தொகையும், வருடம் ஒரு முறை ₹6,000 ஊக்கத்தொகையும் வழங்கும் இத்திட்டத்தின் கீழ் சுமார் 15,785 வாய்ப்புகளை தமிழகம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் பல்லாயிரக்கணக்கான தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறன்கள் மேம்படுத்தப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரமும் முன்னேற்றப்பட்டுள்ளது மிகப் பெரும் சாதனையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது போன்று, பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் தமிழர்களின் நலனைக் காத்து, வளர்ச்சி பாதையில் தொடர்ந்து வழிநடத்திச் செல்லும் பிரதருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.