கன்னியாகுமரியில் பெய்த கனமழை காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வானிலை மையம் அறிவிப்பின்படி கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சுருளோடு, பால மோர், மைலாடி, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது சாரல் மழை பெய்தது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 55.4 மில்லி மீட்டர் அளவிலும், சுருளோடு பகுதியில் 41.4 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 48 அடி முழு கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் தற்போது 36.94 அடிநீர்மட்டம் உள்ளது. அதே போல 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் தற்போது 40.05 அடியாக உயர்ந்துள்ளது.
அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் வானிலை மைய எச்சரிக்கையின் படி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பினர்.