சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த இந்தியாவின் முடிவைப் பற்றி ஐநா சபையில் பாகிஸ்தான் கொடுத்த பொய் தகவலை இந்தியா முறியடித்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கர வாதத்தைப் பாகிஸ்தான் நிறுத்தாத வரை, சிந்து நதி நீர் ஒப்பந்தம் கிடப்பில் போடப்படும் என்று ஐநாவில் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் அசிம் இப்திகார் அகமது, காஷ்மீர் பிரச்சினை குறித்து அவதூறான தகவல்களை முன்வைத்து, இருநாடுகளுக்கான மோதல், அணு ஆயுதபோர் ஆகலாம் என்று அச்சுறுத்தும் வகையில் பேசியிருந்தார்.
பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கடுமையாக விமர்சித்த ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான முக்கியமான நான்கு காரணங்களைப் பட்டியலிட்டு பாகிஸ்தானின் பொய் முகத்தை அம்பலப்படுத்தி உள்ளார்.
ஒப்பந்தத்தின் முன்னுரையில் கூறியுள்ளபடி, 65 ஆண்டுகளுக்கு முன், நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் உணர்வில்தான், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இத்தனை ஆண்டுகளில், இந்தியா மீது மூன்று போர்களையும் ஆயிரக்கணக்கான பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்துவதன் மூலம் பாகிஸ்தான் ஒப்பந்தத்தின் அடிப்படை உணர்வை மீறியுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களில் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மும்பை தாக்குதலிலிருந்து சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வரை,அப்பாவி மக்களைக் கொடூரமாகப் படுகொலை செய்வது எனப் பாகிஸ்தானின் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.
பொதுமக்களைக் கொல்லவும், மத நல்லிணக்கத்தையும் மற்றும் பொருளாதார செழிப்பையும் சீரழிக்கவும் எல்லை தாண்டிய பயங்கர வாதத்துக்குப் பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவது குறித்து விவாதிக்க இந்தியா பல முறை கேட்டும், பாகிஸ்தான் தொடர்ந்து அவற்றை நிராகரித்து வந்தது. பாகிஸ்தானின் இந்த அணுகுமுறை, இந்தியா தனது சட்டப்பூர்வமான உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது என்று பர்வதனேனி ஹரிஷ் தெரிவித்துள்ளார்.
சுத்தமான எரிசக்தி, காலநிலை மாற்றம் மற்றும் மக்கள்தொகை அதிகரிப்பு ஆகியவற்றிற்கான வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப தொலைநோக்கு பார்வையுடன் கூடிய சில அடிப்படை மாற்றங்கள் செய்யப்படவேண்டியுள்ளன.
சில பழைய அணைகளில் கடுமையான பாதுகாப்பு சிக்கல்கள் உருவாகியுள்ளன. உள்கட்டமைப்பில் செய்யப்படவேண்டிய எந்தவொரு மாற்றத்தையும் பாகிஸ்தான் தடுத்து வருகிறது. கடந்த 2012 இல், ஜம்மு-காஷ்மீரில் உள்ள துல்புல் திட்டத்தைப் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கினர். நாட்டின் வளர்ச்சித் திட்டங்களின் பாதுகாப்புக்கும் பொதுமக்களின் உயிருக்கும் பாகிஸ்தான் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும் பர்வதனேனி ஹரிஷ் குறிப்பிட்டார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது பாகிஸ்தான்தான் என்ற தெளிவுபடுத்திய இந்தியா, பயங்கரவாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காட்டாத ஒரு நாடு பொதுமக்களைப் பாதுகாப்பது பற்றிப் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்றும் கூறியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் மீண்டும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்து கடிதம் எழுதிய போதும், பாகிஸ்தான் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தது. ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில், போரை நிறுத்தும் படி கெஞ்சிய பாகிஸ்தான், இப்போது, சிந்து நதிநீரை வழங்கவேண்டும் என்று கெஞ்சத் தொடங்கியுள்ளது.
இந்த பின்னணியில்தான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் நிறுத்தும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.