மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வெளுத்து வாங்கிய கனமழையால் மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும் எனவும், மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மும்பையில் பலத்த மழை பெய்தது.
இதேபோல், தானே, பல்ஹர், சிந்துதுர்க், சதாரா, ராய்காட், ரத்னகிரி ஆகிய பகுதிகளிலும் பரவலாகப் பெய்த மழையால் பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமமடைந்தனர்.