நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெய்து வரும் கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாகப் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடலூர் தொரப்பள்ளி அருகே இருவயல், தேன்வயல் கிராமத்தில் அமைந்துள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகளையும், விளை நிலங்களையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் குடியிருப்பு வாசிகள் தவித்து வருகின்றனர்.
இதனிடையே, குன்னூர் லேம்ஸ் ராக் மற்றும் டால்பின் நோஸ் சுற்றுலா தலங்கள் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு மிகக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.