கர்நாடகாவில் வாகன சோதனையின்போது திடீரென இருசக்கர வாகனத்தை வழிமறித்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் 3 வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மத்துார் தாலுகாவைச் சேர்ந்த அசோக்-வாணி தம்பதியின் மூன்றரை வயது பெண் குழந்தையைத் தெரு நாய் கடித்ததால், குழந்தையை அழைத்துக் கொண்டு பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.
மத்துார் சாலையில் சென்றபோது ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களை சோதனை செய்து கொண்டிருந்த போக்குவரத்து போலீசார், தம்பதியின் வாகனத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அப்போது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையைத் தூக்கிக் கொண்டு பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இது குறித்து தகவலறிந்து போலீசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், போக்குவரத்து போலீசாரின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.