மோகனூர் அருகே உள்ள மதுரை வீரன் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே கே.புதுப்பாளையம் பகுதியில் உள்ள மதுரைவீரன் சுவாமி மற்றும் பரிவார தேவதை கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். காலை கோ பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கிய நிலையில், 2ஆம் கால யாக பூஜைகள் மற்றும் பூர்ணாகுதி சிறப்பாக நடைபெற்றது.
பின்னர், யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் எல்.முருகன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, மதுரை வீரன் சுவாமி மற்றும் பரிவார தேவதைகள் கோயின் முகப்பு வளைவு ஆகியவற்றுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பின்னர், மகா கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி. இராமலிங்கம், பாஜக நிர்வாகிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.