ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதுடன், மேலும் ஒரு சிறுமி கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தங்கள் பிள்ளையை இழந்து தவிக்கும் அக்குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவத்தில் பிடிபட்டுள்ள கொலையாளி குடிபோதையில் இருந்தான் என வெளியாகியுள்ள தகவல், போதைப் பொருட்களின் பிடியில் தமிழகம் சிக்கி சீரழிந்து கிடப்பதையும், பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகம் உருமாறியுள்ளது என்பதையும் நமக்கு மீண்டுமொருமுறை உணர்த்துகிறது என கூறியுள்ளார்.
இதுதான் திமுக-வின் விடியல் ஆட்சியா? தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தானே குற்றங்கள் குறையும்? சட்டம் ஒழுங்கு செம்மையாக இருந்தால் தானே குற்றவாளிகளுக்கு பயமிருக்கும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்களைக் காணும் ஒவ்வொரு குடும்பமும், “நாளை நம் குடும்பப் பெண்களுக்கும் இதே நிலைமைதானோ” என்ற பயத்தில் தான் தமிழகத்தில் வாழ்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது என்றும் அவர் கூறியுள்ளர.
தமிழக முதல்வர் ஸ்டாலின், தனது துருப்பிடித்துப் போன இரும்புக்கரத்தைப் பழுது பார்க்க வேண்டிய நேரமிது என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.