ஆப்ரேஷன் சிந்தூரில் S-400 மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகளின் செயல்திறன் சிறப்பாக இருந்ததாகப் பாராட்டியுள்ள இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், கூடுதல் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவது குறித்து இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்களையும் முகாம்களையும் குறிவைத்து ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் துல்லியமான தாக்குதல்களை இந்தியா நடத்தியது. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுருவி இந்திய இராணுவம் ஆப்ரேஷன் சிந்தூரின் நோக்கத்தைச் சரியாக நிறைவேற்றியது.
அதனையடுத்து, பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளையும் ட்ரோன்களையும், நடுவானிலேயே இந்தியா முறியடித்தது. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுருவ முடியாமல் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. இந்த பெருமை, S-400 வான் பாதுகாப்பு அமைப்பைச் சார்ந்தது என்று உலக அளவில் பாராட்டப் பட்டது.
இந்நிலையில் இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், ஆப்ரேஷன் சிந்தூரில் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகளின் செயல்திறன் சிறப்பாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தங்கள் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் ஒத்துழைத்து வருகின்றன என்றும் கூறியுள்ளார்.
S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் விநியோகம், T-90 டாங்கிகள் மற்றும் Su-30 MKI போர் விமானங்களின் உரிமம் பெற்ற உற்பத்தி, MiG-29 மற்றும் Kamov ஹெலிகாப்டர்களின் விநியோகம், INS விக்ரமாதித்யா பரிமாற்றம், இந்தியாவில் AK-203 துப்பாக்கிகளின் கூட்டு உற்பத்தி மற்றும் BrahMos ஏவுகணைகளின் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு திட்டங்களில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவில் BrahMos ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட மாடலின் உற்பத்திக்கு ரஷ்யா தனது விரிவான தொழில்நுட்பத் திறனை இந்தியாவுக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகளில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, உத்தரப்பிரதேசத்தில், புதிய மேம்பட்ட அதிநவீன BrahMos ஏவுகணை உற்பத்தி ஆலை கட்டப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக,2018 ஆம் ஆண்டு ‘சுதர்சன சக்ரம்’ என்று இந்திய ராணுவத்தால் அழைக்கப்படும் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஐந்தை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டது. இது தொடர்பான இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் 5.43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2019-க்குப் பிறகு, S-400 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா வாங்கியது.
அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்புக்கு இணையான S-400 நகரும் வான் பாதுகாப்பு அமைப்பாகும். சாலை வழியாகக் கொண்டு செல்ல முடியும் மற்றும் 5 முதல் 10 நிமிடங்களுக்குள் இதைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.