பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் தமது 75-ஆவது வயதில் காலமானார். அவரைப் பற்றிய நினைவலைகளைப் பார்க்கலாம்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள மேலநத்தம் கிராமத்தில் 1949-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி பிறந்தார் ராஜேஷ். படிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு வந்த ராஜேஷ் சில காலம் ஆசிரியராக பணியாற்றினார். சிறு வயதில் இருந்தே நடிகராக வேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டு. அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த போது ‘கன்னிப் பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
1984-ஆம் ஆண்டு ராஜேஷ் நடித்த ‘சிறை’, ‘ஆலய தீபம்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ ஆகிய படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றன. ‘சிறை’ படத்தில் எதிர்மறை வேடம் என்றாலும் ராஜேஷின் நடிப்பு பேசப்பட்டது. கே.பாலச்சந்தர் இயக்கிய ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் ஒரு நல்லவர் அரசியலுக்குள் நுழைந்து எப்படிக் கெட்டவராகிறார் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் ராஜேஷ்.
உழைத்து ஈட்டிய பணத்தை மது, சிகரெட் என வீணாக்காமல் சொத்தாக மாற்றியவர் ராஜேஷ். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியுடன் இணைந்து அரசியலில் ஈடுபட்ட ராஜேஷ், அவரது வழிகாட்டுதலின்படி ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி வெற்றிபெற்றார்.
சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து வந்த ராஜேஷ் பின்னணிக் குரல் கொடுக்கும் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். ஜோதிடத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்ட அவர் அதுபற்றி புத்தகம் எழுதியிருக்கிறார்.
YOUTUBE-ல் பலரைப் பேட்டி எடுக்கும் பணியையும் செய்திருக்கிறார். 75 வயதுக்கு மேல் வாழ்வது தேவையற்றது என்று நண்பர்களிடம் கூறுவாராம் ராஜேஷ். அவரது கூற்றுப்படியே 75-ஆவது வயதில் இந்த மண்ணைவிட்டு மறைந்திருக்கிறார்.