சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.
தவெக தலைவர் விஜய் கடந்த 2 ஆண்டுகளாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான முதல்கட்ட பாராட்டு விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகளை நேரில் சந்தித்த தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு மாணவராக மேடையில் அழைத்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகள் 2 பேருக்கு வைர கம்மல்கள் பரிசாக வழங்கப்பட்டது. பரிசுகளைப் பெற்ற மாணவ மாணவிகள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
முன்னதாக விழா மேடையில் பேசிய தவெக தலைவர் விஜய், ஊழல் புரியாதவர்களைத் தேர்ந்தெடுப்பதே சரியான ஜனநாயக கடமை என்றும் தேர்தலின் போது யாரும் காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப் போட வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.