ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக விடுத்த இரங்கல் செய்தியை கொலம்பியா அரசு திரும்பப் பெற்றதாகக் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.
சசி தரூர் தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழு, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்குச் சென்று, அங்குள்ள அரசு பிரதிநிதிகளைச் சந்தித்தது.
அப்போது இந்திய ராணுவத்தின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் உயிரிழந்தது பயங்கரவாதிகள் மட்டுமே எனவும் அப்பாவிகள் அல்ல என்பதும் ஆதாரத்துடன் எடுத்துரைக்கப்பட்டது.
இதனையடுத்து இந்திய ராணுவ தாக்குதல்களில் பாகிஸ்தானியர்கள் உயிரிழந்ததாகக் கூறி வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியை கொலம்பியா அரசு திரும்பப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து பேசிய சசிதரூர், பஹல்காம் தாக்குதலையடுத்து பயங்கரவாத செயல்களை இனியும் பொறுக்க முடியாது என்பதால் சிந்துநதி நீர் பகிர்வு நிறுத்தப்பட்டதாகக் கூறினார்.
பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவைக் கைவிட்டதற்கான உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் வரை சிந்து நதி விவகாரம் குறித்து மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
பாகிஸ்தானிற்கு ஆதரவான தனது அறிக்கையைத் திரும்பப் பெற்றுள்ள கொலம்பியா அரசு, இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு வலுவான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் விரைவில் அறிக்கை வெளியிடும் என்றும் சசிதரூர் தெரிவித்தார்.