ஒரு வெளிநாட்டுக் காரர், வேத ஞானத்தை உலகமயமாக்கியதற்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப் பட்டுள்ளார். மற்றொருவர் ஐஐடி பாபாவாக பிரபலமடைந்துள்ளார். பொறியாளரான இருவருமே இந்திய வேத ஞானத்தால் ஈர்க்கப் பட்டவர்கள். யார் இவர்கள்? என்ன பின்னணி என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் பிறந்த ஜோனாஸ் மாஸ்ட்டி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். ராணுவப் பொறியியல் நிறுவனத்தில் பயின்ற மாஸ்ட்டி சுமார் 5 ஆண்டுகள் பிரேசில் இராணுவத்தில் பணியாற்றிய பின், அந்நாட்டின் முன்னணி பங்குச் சந்தை ஆலோசகராக பணியாற்றி வந்துள்ளார்.
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் அமைதி இல்லையே என்று யோசிக்கத் தொடங்கிய மாஸ்ட்டி வாழ்வின் உண்மையான அர்த்தம் என்ன? என்று கேள்விக்கு விடை தேடத் தொடங்கினார்.
2005ம் ஆண்டில்,பிரேசிலில் வேதாந்தம் மற்றும் சமஸ்கிருதத்தைக் கற்றுத்தந்த குளோரியா அரியராவிடம் பாடம் பயின்றார். ஏற்கெனவே 2020ம் ஆண்டு, குளோரியா அரியராவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
2006ம் ஆண்டு சுவாமி தயானந்த சரஸ்வதியுடனான சந்திப்பே மாஸ்ட்டியின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. கோயம்பத்தூரில் உள்ள ஆர்ஷ வித்யா குருகுலத்தில் 3 ஆண்டுகள் தங்கியிருந்து சமஸ்கிருதம் கீதை வேதாந்தம் மற்றும் யோகாவை கற்றுள்ளார். இந்த அனுபவமே, இதன்பிறகு, ஜோன்ஸ் டி மாஸ்ட்டினை ‘வேதாந்த ஆச்சார்யா’ விஷ்வ நாத் ஆக மாற்றியுள்ளது.
பிரேசிலுக்குத் திரும்பியவுடன், ரியோடி ஜெனீரோவுக்கு அருகே பெட்ரோபோலிஸ் மலையில்,விஷ்வ வித்யா குருகுலத்தைத் தொடங்கி வேதாந்தம்,கீதை,சமஸ்கிருதம், வேத மந்திரங்கள் மற்றும் வேத கலாச்சாரத்தைக் கற்பித்து வருகிறார்.
மேலும், ஆன் லைன்மூலம் இலவசமாக,பாரதத்தின் பாரம்பரிய வேத ஞானத்தை உலகமெங்கும் பரப்பி வருகிறார். கடந்த 7 ஆண்டுகளில் சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேலான மாணவர்களுக்கு வேத ஞானக் கல்வியைக் கற்றுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போர்ச்சுகீசிய மற்றும் ஆங்கிலத்தில் வேதம் குறித்த நூல்களை வெளியிட்டு வரும் இவர், வேதாந்த முகாம்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் என ஏராளமான ஆன்மீகப் பணிகளைச் செய்து வருகிறார்.
குறிப்பாக, 2024 ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த ஜி 20 மாநாட்டின் போது, சமஸ்கிருதத்தில் ராமாயணகதையை வீடியோவாக வழங்கினார். பிரேசிலில் இந்தியக் கலாச்சாரத்தைப் பரப்பும் ஜோன்ஸ் டி மாஸ்ட்டினை குறிப்பிட்டு ஏற்கெனவே 2020 ஆம் ஆண்டு தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் வேத கலாச்சாரத்தின் தூதர் என்று பிரதமர் மோடி பாராட்டி இருந்தார். இந்நிலையில், இலக்கியம் மற்றும் ஆன்மீகக் கல்வி பிரிவில் மாஸ்ட்டிக்கு, பத்ம ஸ்ரீ விருது வழங்கப் பட்டுள்ளது.
இவர் இப்படி என்றால், இன்னொருவர் அபய் சிங். கையில் ஒரு ஸ்மார்ட்போனுடன் காவி அங்கி அணிந்த சிங், சமீபத்தில் நடந்த கும்பமேளாவில் ரீல்ஸ், செல்ஃபி, என ஐஐடி பாபாவாக பிரபலமானார். கரக்பூர் ஐஐடி முன்னாள் மாணவரான அபய் சிங் , வேத ஞானத்தைச் செல்வாக்கு மிக்க நவீனக் கலாச்சாரத்துடன் கலப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
நெற்றியில் குங்குமம், கழுத்தில் ருத்ராட்ச மாலை,வெள்ளை வேட்டி மற்றும் வெறுங்காலுடன் இருக்கும் மாஸ்ட்டி, மரபு மாறாமல் வேதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த எளிமையும் அர்ப்பணிப்புமே அவரை வேதாந்த ஆச்சார்யாவாக மாற்றியுள்ளது.
மாறாக, வேத மரபை மீறும் நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ள அபய் சிங், ஐஐடி பாபா என்ற கேலிக்குரிய பிம்பத்தைக் கொடுத்துள்ளது. சொல்லப்போனால், பிரேசில் வேதாந்தியான மாஸ்ட்டி, காலத்தால் அழியாத வேத பாரம்பரியத்தை நினைவூட்டுகிறார். ஐஐடி ‘பாபா’ அபய் சிங், விளம்பர மோகத்துக்கும் மலிவான பிரபலத்துக்கும் அலைபாயும் தலைமுறையின் நிலையை வெளிப்படுத்துகிறார்.