பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையேயான மோதல் பூதாகரமாகியுள்ள நிலையில், இருவரும் தனித்தனியாக தங்களது ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
இதனிடையே திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் வியாழக் கிழமை பேட்டியளித்த ராமதாஸ், அன்புமணிக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்த நிலையில் ராமதாஸை கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பேராசிரியர் தீரன், எம்எல்ஏ அருள் ஆகியோர் வெள்ளிக் கிழமை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து பாமக பொருளாளர் திலகபாமாவை அப்பொறுப்பில் இருந்து நீக்கி, அவருக்குப் பதில் சையத் மன்சூர் உசேன் என்பவரை நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டார்.
தொடர்ந்து பல்வேறு மாவட்ட தலைவர்களையும் மாற்றி அறிவிப்பு வெளியிட்டார். இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் சென்னை சோழிங்கநல்லூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில், பாமக மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் அடங்கிய கூட்டமும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது பாமகவின் புதுப்பித்த உறுப்பினர் அட்டையை, மாவட்ட நிர்வாகிகள், அன்புமணி ராமதாஸுக்கு வழங்கினர். முன்னதாக ராமதாஸால் நீக்கப்பட்ட மாநிலப் பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் மீண்டும் அதே பதவியில் நீடிப்பதாக அன்புமணி அறிவித்தார். இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவரது ஆடிட்டரான சுப்புரத்தினம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். இதேபோல், சென்னை சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகளுடன் 2-வது நாளாக அன்புமணி ஆலோசனை நடத்தினார். இதில் ராமதாஸின் தீவிர ஆதரவாளராகக் கருதப்பட்ட பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உட்பட 15 பேர் பங்கேற்றனர்.