பள்ளிகள் திறந்த முதல் 5 நாட்களுக்கு மாணவர்களின் புத்தக பைகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், முதல் நாளிலேயே மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஒவ்வொரு மாணவனின் தனித்திறனைக் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் எனவும், பள்ளிகள் திறந்தவுடன் வெறும் பாடப் புத்தகங்களில் பிள்ளைகளை மூழ்கடிக்காமல் 5 நாட்களுக்கு புத்தக பைகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
விடுமுறைக் கொண்டாட்டம் முடிந்து பள்ளி திரும்பும் பிள்ளைகளுக்கு கடிவாளமிட்ட குதிரை போல பாடங்களை மட்டுமே கற்பித்தால் அவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பள்ளிகளில் போதிய கழிவறையின்றி இரு மழலை உயிர்கள் காவு வாங்கப்பட்ட கொடூரத்தை தமிழகம் இன்னும் மறக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள நயினார் நாகேந்திரன், அனைத்து பள்ளிகளிலும் சுத்தமான குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளனவா என்பதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.