திருச்சி மாநகர் பகுதியில் திருடர்கள் பற்றி வீட்டின் உரிமையாளர் தகவல் கொடுத்தும் கொள்ளையர்களை போலீசார் கோட்டை விட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கூனி பஜார் பகுதியை சேர்ந்த சக்திவேல், தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டுக்குள் இருந்து சத்தம் வருவதை உணர்ந்தார்.
சுதாரித்துக்கொண்ட சக்திவேல் வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு காவல் நிலையத்திற்கு தகவலளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடர்களை பிடிக்க முயன்றபோது 25 சவரன் நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.
அப்போது ஒருவரை மடக்கிப் பிடித்த மக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர். வீட்டின் உரிமையாளர் தகவல் கொடுத்தும் திருடர்களை போலீசார் தப்பவிட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.