வார விடுமுறையையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் அண்ணாமலையார் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவது வழக்கம்.
அந்த வகையில், ஞாயிறு விடுமுறையையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை முதலே தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் அதிகளவில் குவிந்தனர். அதிகாலை 4.30 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார்-உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, ராஜகோபுரம் நுழைவாயில் வழியாக வந்து நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.