இந்தியாவின் முப்படைகள் இணைந்து எவ்வாறு செயல்படும் என்பதை ஆப்ரேஷன் சிந்தூர் காட்டியுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ண கான சபையில் ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஏர் மார்ஷல் மாதேஸ்வரன், முன்னாள் இராணுவ அதிகாரி ஜான் பிரின்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவில் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமானதாக மாற்றிய ஆயுதப்படைகளுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்தியாவின் எழுச்சி மற்றும் இந்தியாவின் வரலாற்றுக்கு திருப்புமுனையாக ஆப்ரேஷன் சிந்தூர் அமைந்துள்ளதாக கூறிய அவர், 100 ஆண்டுகள் கடந்தாலும், இந்த மகத்தான வெற்றி குறித்து மாணவர்கள் பேசுவார்கள் என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பாரத நாட்டை புரிந்துகொள்ளக்கூடிய தலைவர் நமக்கு கிடைத்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.