ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 ஆட்டத்தில் மும்பை அணி வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஐபிஎல் குவாலிபயர் 1 ஆட்டத்தில் தோல்வியடைந்த பஞ்சாப் அணியும், எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற மும்பை அணியும், குவாலிபயர் 2 ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தின. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தலா 44 ரன்கள் குவித்தனர். 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் கடைசி வரை களத்தில் நின்று 84 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடி தந்தார்.
இதனையடுத்து ஐபிஎல் தொடரில் 6-வது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பை மும்பை அணி இழந்தது. குவாலிபயர் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
17 சீசனாக கோப்பை வெல்லாத இந்த இரு அணிகளும் பைனலுக்கு முன்னேறி உள்ளதால், நடப்பு தொடரில் புதிய அணி கோப்பை வெல்வது உறுதியாகி உள்ளது. இந்த இரு அணிகளும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சம அளவில் உள்ளதால் நாளை நடைபெறும் பைனல் போட்டியை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.