சிவகங்கை அருகே ஆடு, கோழி திருட சென்ற சகோதரர்கள் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே அழகமாநகிரி கிராமத்தின் எல்லைப் பகுதியில் சுப்பு என்பவருக்குச் சொந்தமான தோப்பு உள்ளது.
இங்கு ஆடு, கோழிகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், நள்ளிரவு உள்ளே புகுந்த இருவர் கால்நடைகளைத் திருட முயன்றுள்ளனர்.
இதில், கோழிகள் சத்தமிடவே கிராம மக்கள் திரண்டு வந்து இருவரையும் பிடித்துத் தாக்கியுள்ளனர். இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, இருவரும் வழியிலேயே உயிரிழந்தனர்.
இதனை அடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்த இருவரும் கட்டானிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான மணிகண்டன், சிவசங்கர் எனத் தெரியவந்தது. சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.