சங்கரன்கோவில் நகர்மன்ற திமுக தலைவி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி 24 உறுப்பினர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் அடிப்படைத் தேவைகள் முறையாகச் செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரியிடம் கூறியும், நடவடிக்கை எடுக்கவில்லையென, நகர்மன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில், நகர்மன்ற தலைவி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 24 உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர் நாகராஜனிடம் மனு அளித்தனர்.
திமுக நகர்மன்ற தலைவிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களே மனு அளித்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.