சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரென மழை வெளுத்து வாங்கியது.
சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, ஓமலூர், புளியம்பட்டி, தாரமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும், கனமழையின் காரணமாக, சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருகோவிலூரில் வெளுத்து வாங்கிய கனமழையால் மானாவாரி பயிர் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில தினங்களாக அப்பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று திருக்கோவிலூர், விளந்தை, மணலூர்பேட்டை, ஜம்பை, மேமலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.