அமெரிக்காவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகப் பேசிய இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.
இஸ்ரேலுடன் தொடர்பு வைத்திருப்பதற்காக எம்ஐடி கல்வி நிறுவனத்தை அவர் விமர்சித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது தொடர்பாகப் பேசியுள்ள எம்ஐடி கல்வி நிறுவன செய்தித் தொடர்பாளர், கருத்துச் சுதந்திரத்தை எம்ஐடி ஆதரிக்கிறது எனவும், ஆனால் மேடையிலிருந்தே போராட்டத்தை வழிநடத்துவது ஏற்புடையதல்ல எனவும் கூறினார்.
எனினும் மேகா வெமூரியின் பட்டப்படிப்பு சான்றிதழ் அவருக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ள மேகா வெமூரி, இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் ஒரு நிறுவனத்தின் மேடையைக் கடந்து நடக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறினார்.